Saturday, September 03, 2011

சமண சிற்ப விளக்கம்


சமண சிற்ப விளக்கம்

இந்திய சமயங்களை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று பிராமண
சமயங்கள், மற்றொன்று சிரமண சமயங்கள். இதில், ஜைனமும், பெளத்தமும்
சிரமண சமயப் பிரிவுகளை சேர்ந்தன. பொதுவாக இந்திய சமயங்கள் புறத்தே
ஒன்றுபோல் காணப்பட்டாலும் அவைகள் அகத்தே தங்களுக்குள் முரண்பட்டேயிருந்தன.
அவ்வாறே, ஜைனமும், பெளத்தமும் புறத்தே ஒன்றுபோல் காணப்பட்டாலும்,
அகத்தே இரண்டும் வேறுப்பட்டேயிருந்தன. தற்போதைய சூழ்நிலையுல் சமணம்,
பெளத்தம் இரண்டும் அருகிவிட்ட நிலையில் புறவயமான சிற்பங்களுக்குள்
வேறுபாடு தெரிந்துக் கொள்வது இன்றியமையாதது. தற்காலத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த கட்டுரை பயன்படும் என்ற நோக்கிலும்
எழுதப்படுகிறது.


சமண சிற்ப அம்சங்கள்

பல சொற்கள் உணர்த்தாததை ஒரு படம் உணர்த்தும் என்பார்கள். சிற்பங்களும்
அவ்வாறே. சமயச் சிற்பங்களும், சித்திரங்களும் அந்தந்த சமயங்களின் பிரதிபலிப்பு
என்றால் அதுமிகையாகாது.

இந்திய சமய வரலாறும் உணர்த்துவதும் அதுவேயாம். இந்திய வரலாற்றை
ஆராயும்போது உருவ வழிபாடு என்பது சிரமண மதங்களிலிருந்தே தொடங்குகிறது.
தற்போதைய சிற்பங்களின் மூலம் பாத வழிபாடேயாகும். தீர்த்தங்கரர்கள்
ஆகட்டும் புத்தர்கள் ஆகட்டும், தங்கள் கொள்கைகளை பரப்ப இந்திய
நிலப்பரப்பு முழுதும் நடந்தே சென்றார்கள். அவற்றின் குறியீடே இந்த
பாத வழிபாடாகும். பின்னர் அவ்வழிபாடு, படிப்படியாக உருவ வழிபாடாக
மாறத் தொடங்கியது.


பார்க்க படம் - பத்ரபாகு முனிவரின் பாதம் - கி.பி.3ஆம் நூற்றாண்டு

அறப்புணைவோர் அல்லது தீர்த்தங்கரர்

சமணத்தில், முதன் முதல் பாத வழிபாடே நடைமுறையிருந்தது. பின்னர்
அறப்புணைவோர் என்று அழைக்கப்படும் தீர்த்தங்கரர்களின் சிற்பங்களை
அமைக்கத் தொடங்கினர். தீர்த்தங்கரர் நம்மை போல் மனிதர்களாகப் பிறந்து,
தங்கள் விடாமுயற்சியின் மூலம் பற்றுக்கோடுகளை களைந்து சிவகதியடைந்து
இறைவர்களாக திகழ்ந்தவர்கள்.ஆதலால், சமண சிற்பங்களை அமைக்கும்போது
மனித மாதிரியாகவே அமைத்தார்கள். இந்த வகையில் மற்ற சமய இறைவர்
சிற்பங்களிலிருந்து சமண சிற்பங்கள் வேறுபடுவதைக் காணலாம். (சிவனார்,
விஷ்ணு ஆகியோருக்கு நான்கு கைகள் இருப்பதுபோல சிற்பங்களை
அமைப்பதை ஒப்புநோக்குக)

பின்னர், அறப்புணைவோரின் காவலர்களான யட்சன், யட்சி முதலியானோர்
சிற்பங்களையும் சிற்பங்களாக வடிக்கத் தொடங்கினர். அறப்புணைவோர்
சிற்பங்கள் இரண்டு விதமாக நிலைகளில் அமைப்பார்கள். ஒன்று நின்றக்
கோலத்திலும் (கயோத்சர்கம்), மற்றொன்று அமர்ந்தக் கோலத்திலும்
(பத்மாசனம்) இருக்கும்.



பார்க்க படம் - பார்ஸவநாதர் - பத்மாவதி

பத்மாசனமும் அர்த பத்மாசனமும்

தென்னாட்டில் அமைக்கப்படும் அறப்புணைவோர் சிற்பங்களில் பெரும்பாலும்
அர்த பத்மாசனத்தில் காட்டப்பட்டிருக்கும். அர்த பத்மாசனம் என்றால் பாதி
பத்மாசனம். வடநாட்டில் பெருவாரியான இடங்களில் பத்மாசன (யோகாசனம்)
நிலையில் காட்டப்பட்டிருக்கும். தென்னாட்டில் சமண சிற்பம் ஆடை ஏதும்
இல்லாமல் காட்டப்பட்டிருக்கும். (உற்றாற்கு உடம்பும் மிகை எனும்போது
ஆடை எதற்கு! அணியாத அழகன் இவனென்ப!!)

சமணங்கால் அல்லது சப்பளாங்கால்

சப்பளாங்கால் என்ற சொல்லை நாம் கேட்டிருப்போம். கிராமங்களில் இன்றும்
பயன்படுத்தும் சொல்வழக்கிது. தரையில் அமர்ந்திருக்கும் கோலத்திற்கு
சப்பளாங்கால் என்கிறோம். அது சமணங்கால் என்பதின் திரிபேயாகும்.
சமணர்கள் அமர்ந்து தியானம் செய்வதை பார்த்த மக்கள் அவ்வமர்ந்த
நிலைக்கு சமண+கால்=சமணங்கால் என்று அழைக்கலானார்கள். இந்த
சொல் பரவலாகத் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்திருக்கலாம்.
தமிழர்களிடம் சமணர் தாக்கத்தை இது காட்டுவனவாக திகழ்கிறது இச்சொல்.

சிற்ப குறியீடுகள்

அக்காலத்தில் மக்கள் தங்கள் தேவைகளுக்கு மன்னனை (தலைவன்) நோக்கி
இருந்ததுபோல, அரசர்களாகவும், சக்கரவர்த்திகளாக திகழ்ந்த அறப்புணைவோர்
சிற்பங்களை அமைக்கும்போது அரசனின் குறியீடுகளான, சாமரம், குடை,
சிம்மாசனம், சிம்மாசனத்தில் சாய்ந்துக் கொள்ள பயன்படும் திண்டு ஆகியவற்றை அமைத்திருக்கிறார்கள். அக்குறியீடுகள் அறப்புணைவோர்களின் வாழ்க்கை வரலாற்றை பிரதிப்பலிப்பதாக கொள்ளலாம்.

எண்வகை சிறப்புகள்

அறப்புணைவோர் (தீர்த்தங்கரர்) வாழ்க்கையில் முக்கிய ஐந்து சம்பவங்களை ”பஞ்ச
கலியாணங்கள்” என்று பெயரிட்டு அழைப்பார்கள். அவை முறையே,

1.கர்ப்பாவதரண கல்யாணம்,
2.ஜன்மபிஷேக கல்யாணம்,
3.தீட்சாக் கல்யாணம்,
4.கேவலாற்பத்தி கல்யாணம்
5.பரிநிர்வாணக் கல்யாணம்

என்பன. இவற்றில் கேவலாற்பத்தி கலியாணம் என்பது அறப்புணைவோர்களுக்கு
கேவல ஞானம் (வாலறிவு – தூய அறிவு) ஏற்படும்போது கொண்டாடப்படுகிறது.
அவ்வமயம், அமரர் உலக அரசனான தேவேந்திரன் அறப்புணைவோர் அடிதாழ்ந்து
”சமவசரணம்” என்னும் கோயிலை(கோட்டம்/திருமணிக் கோயில்) அமைப்பான்.


பார்க்க படம் - சமவசரண படம்

(இச்சமவசரணத்தை நினைவிற் கொள்ளும் வகையில் மானிடர்கள் தீர்த்தங்கரர்களின்
கோயில்களை அமைத்து வழிபாடு செய்கிறார்கள்)


அறப்புணைவோர் அச்சமவசரணத்தில் எழுந்தருளும்போது பகவானிடத்து எண்வகைச்
சிறப்புகள் தோன்றும்.

அவைகள் பின்வருமாறு:

1. அசோக மரம் அல்லது பிண்டி மரம்
2. தேவர் மலர்ப் பொழிவு அல்லது புஷ்பவிருஷ்டி
3. திவ்யத்தொனி
4. சாமரம் வீசுவோர்
5. சிம்மாசனம் அல்லது அரியாசனம்
6. தேவ துந்துபி ஒலி
7. ஒளி மண்டலம்
8. முக்குடை




பார்க்க படம் - சமண சிற்ப விளக்கப் படம்

இந்த எண்வகைச் சிறப்பை கீழே வரும் பாடல் அழகாகக் கூறுகிறது.

“சுடர்மண் டலஞ்சுர துந்துபி தெய்வத் துவனிசிங்கப்
பிடர்மண் டலவணை பிண்டிவெண் சாமரை பெய்மலரி
னடர்மண் டலமழை யம்பொற் குடைமும்மை யாமடியோ
மிடர்மண் டலம்கெடுப் பார்க்கிமை யார்செயு மென்சிறப்பே”


(இதில் திவ்யதொனியும், தேவ துந்துபியின் ஒலி ஆகியவைச் சிற்பங்களில்
காட்டமுடியாது)

1.அசோக மரம் அல்லது பிண்டி மரம்

இதில் இரண்டு தீர்த்தங்கரர்கள் தவிர ஏனையோர் அசோக மரத்தின் கீழே ஞானம்
பெற்றதால் அதன் குறியீடாக அசோகமரம் சிற்பங்களில் காட்டப்படும்.
(மற்ற இருவருக்கு அரசமரம் காட்டப்படும். ஆனால் சிற்பங்களில் அவ்வித்தியாசம்
காட்டமுடியாது).

சிலப்பதிகாரத்தில், மதுரைக் காண்டம், காடுகாண் காதையில்,

“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்”


என்று இளங்கோவடிகள் வாழ்த்தில், முக்குடையும், பிண்டியும் குறித்திருப்பதைக்
காணலாம்.

2.தேவர் மலர்ப் பொழிவு

பகவான் வாலறிவு பெற்று, சமவசரணத்தில் எழுந்தருளும் போது தேவர்கள்
மலர்மாரிப் பொழிவார்கள். இதனை குறிக்க புஷபவிருஷ்டி என்னும் மலர்ப்
பொழிவுக் காட்டப்படுகிறது.

திருப்பாமாலை - பஞ்ச குருபக்தி – பாடல் எண்.1-10

“ஒருபெருங் கேவலத் துலகம் மூன்றும்
பொருவற உணர்ந்த புண்ணிய ராகிப்
பேரொளி மண்டிலம் பெரிதினிது விளங்க
அரிசுமந் தேத்திய அணி ஆசனத்துப்
பொங்கு சாமரை புடைநின் றிரட்ட
எங்குந் துந்துபி அந்தரத் தியம்ப
மருவிய பூமழை வானோர் சொரிதர
எரிதளிர்ப் பிண்டி யின்னிழன் மேவி
இலங்கொளி முக்குடை இயல்பெற நிழற்றக்
கலங்கிய இருவினைக் கடிபடை உடையப்”


3.திவ்யதொனி

தேவேந்திரன் அமைக்கும் சமவசரணத்தில் மன்னுயிர்கள் (மானிடர்கள்,
மிருகங்கள்,பறவைகள்) மட்டுமல்ல வானுலகத்திலுள்ள நான்கு வகைத்
தேவர்களும் பகவான் அறம் கேட்க வருவார்கள். பகவான் திருவாய்
மலர்ந்தருளுவார். (அவருடைய வாய் அசையாது, ஆனால் அவர் திருவாய்
பொழியானது அனைத்து மிருக, பறவை உயரிகளுக்கும் தத்தம் மொழிகளிலும்,
மானிடர்களுக்கு அவரவர் மொழிகளில் (18 மொழிகள்) கேட்கும். இவற்றை
திவ்யதொனி என்பார்கள். தமிழில் “திருவாய் மொழி” என்றும் ”திருமொழி”
என்றும் அழைக்கப்படும்.

திருநூற்றந்தாதி – பாடல்:52

கதமொழி தீர்முன் கறுவுக டேய்மின் கருணைநெஞ்சோ
டிதமொழி கூறுமி னின்னுயி ரோம்புமி னெப்போழுதுஞ்
சுதமொழி கேண்மின் சுகமிக வேண்டிற் றுறவர்சொன்ன
வதமொழி யேன்மி னிவைசிந னார்திரு வாய்மொழியே”


4.சாமரம்

அரசருக்கு இரண்டு பக்கமும் சாமரம் வீசுவோர் இருப்பது போன்றே அரச வம்சமான தீர்த்தங்கரர்களுக்கும் தேவர் சாமரம் வீசுவதாக குறியீடு அமைத்திருப்பர்.

5.சிம்மாசனம் அல்லது அரியாசனம்

அரசர்கள் சிம்மாசனத்தில் அமருவதுபோல தீர்த்தங்கர சிற்பங்களிலும் சிம்மாசனம்
குறியீடாகக் காட்டப்பட்டிருக்கும். தீர்த்தங்கரர் சிலைகளில் கீழ் காட்டப்படும் சிங்க
முகங்களை வைத்து அது வர்த்தமான மகாவீரர் இலாஞ்சனம் (சின்னம்) என்றும்
அந்தச் சிற்பம் அவரின் சிற்பவடிவம் என்று கருதுகிறார்கள். இது தவறு. எல்லா
தீர்த்தங்கரர் சிலைகளிலும் சிங்க முகங்கொண்ட ஆசனங்கள் (சிம்மாசனம்)
அமைக்கப்பட்டிருக்கும்.

இங்கு ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும், தீர்த்தங்கர பகவான் அமர்ந்த
கோலத்தில் சிலை அமைக்கும்போது அரியாசனத்திலும், நின்ற கோலத்தில்
தாமரை மலரில் நிற்பது போலவும் காட்டப்படும்)

6.தேவ துந்தூபி ஒலி

சமவசரணத்தில் பகவான் எழுந்தருளும்போது தேவர்கள் துந்துபி என்ற
வாத்தியத்தை முழங்கும்போது ஏற்படும் ஒலி. இவற்றை சிற்பங்களில்
காட்டமுடியாது.

7.ஒளி மண்டலம்

இஃது எல்லா சமய சிற்பங்களிலும் காட்டப்படுவதுதான். தென்னக சமண
சிற்பங்களில் இப்பிரபாவளி நீள்வட்டத்தில் காட்டப்பட்டிருக்கும். வடநாட்டு
சமண சிற்பங்களில் அவை முழுவட்டவடிவில் காட்டப்பட்டிருக்கும்.

8.முக்குடை

அரசர்கள் அமரும் அரியாசனத்தின் மேல் ஒரு குடையிருக்கும். எல்லா
தேசங்களையும் அரசர்கள் வெற்றிக் கொண்டாலும் மற்ற உலகங்களை
வெற்றிக் கொள்ள முடியாது என்பதால் ஒரு குடை மட்டும் இருக்கும்.
ஆனால், அறப்புணைவோர்கள் தங்கள் கேவல ஞானத்தால் மூன்று
உலகங்களையும் (மேல்,நடு மற்றும் கீழ்) வென்றவர்கள் என்பதால்
குறியீடாக மூன்று குடைகள் காட்டப்பட்டிருக்கும்.

(முக்குடை முறையே சந்திராதித்தம், நித்திய விநோதம், சகலபாசனம்
என்று அழைக்கப்படும்)


இரா.பானுகுமார்,
சென்னை

(இக்கட்டுரை த.ம.அ
விற்காக எழுதப்பட்டது)

Sunday, July 10, 2011

குறளும் நிகண்டுகளும்

குறளும் நிகண்டுகளும்

இன்றைய அகராதிகளுக்கு முன்னோடி நிகண்டுகள். நிகண்டு
வடமொழிச் சொல். இதன் தமிழ்ச் சொல் “உரிச்சொற்பனுவல்”
என்பது. சொற்பொருள் களஞ்சியங்களாகத் திகழும் நிகண்டுகள்
மொழி வளர்ச்சிக்கும், மொழி ஆர்வலர்க்கும் பெரும் துணையாகவிருப்பன.
பழமைக் கழிவதும், புதுமைப் புகுவதும் காலவியற்கை. ஒரு
சொல் கால வர்த்தமானங்களில் வெவ்வேறு பொருள்களை
கொண்டு வழங்குதல் கண்கூடு. ஆயின், நிகண்டுகள் அவற்றைத்
தொகுத்துவதுமல்லாமல் அவற்றை பின்னைத் தலைமுறையினருக்குப்
பதிவுச் செய்யும் காலக்கண்ணாடிகள் என்றால் மிகையாகாது.

தமிழ் நிகண்டுகள்

தமிழ் நிகண்டுகளின் தொடக்க காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு1
என்று அறிஞர்கள் கூறுவர். நிறைய தமிழ் நிகண்டுகள் இருந்தாலும்,
திவாகரம், பிங்கலாந்தை, சூடாமணி ஆகியவை மிக
முக்கியமானதாகக் கருதப் பட்டுவருகிறது. இவற்றில் திவாகரம்
காலத்தால் முந்தையது. இதனையொட்டியக் காலத்தில் எழுந்தது
பிங்கல நிகண்டு என்னும் பிங்கலாந்தை. சூடாமணி நிகண்டுக்
காலத்தால் மிக பிந்தையது. எனினும், மற்றைய எல்லா
நிகண்டுகளிலும் மிகப் பிரபலமானது இதுவேயாம். இதன்
காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு2 என்பர்.

திருக்குறள் கடவுள் வாழ்த்து

குறளாசிரியர் தேவர் பெருமான், கடவுள் வாழ்த்தில் தான்
வழிப்படும் இறைவனைப் போற்றி வணங்கியிருக்கிறார். அவர்
எந்த இறைவனை வணங்கியிருக்கிறார் என்பதை, இங்கு
நிகண்டுகள் மூலம் ஆராய்ந்து, ஒப்பு நோக்குவோம். பின்னர்,
அந்நிகண்டுகள் அவ்வாறு கூறுவதற்கு இலக்கியத் தரவுகள்
உள்ளனவா என்றும் பார்ப்போம்.

குறளாசிரியர், தான் வழிப்படும் இறைவனை கீழ் வரும்
சொற்களைக் கொண்டு குறித்திருக்கிறார். (மணக்குடவர் வரிசைப்படி)

1. ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. தனக்குவமை இல்லாதான்
5. அறவாழி அந்தணன்
6. வேண்டுதல் வேண்டாமை இலான்
7. இருவினையும் சேரா இறைவன்
8. பொறிவாயில் ஐந்தவித்தான்
9. இறைவன்
10. எண்குணத்தான்

கடவுள் வாழ்த்து - நிகண்டுகள் – ஒப்புநோக்கு

எல்லா நிகண்டுகளையும் ஒப்பு நோக்குவது இயலாதது. ஏனெனில்,
சில நிகண்டுகள் காலத்தால் மிக, மிக பிந்தியவை. மேலும்,
அந்நிகண்டுகளில் முக்கிய தெய்வங்களைக் குறிக்கவில்லை.
குறிப்பாக, நாமதீப நிகண்டில் அருகன் நாமங்கள் (பெயர்)
குறிக்கப்படவில்லை. இதனான், முக்கிய, சிறந்த நிகண்டுகளான
திவாகரம், பிங்கலாந்தை, சூடாமணி மற்றும் கயாதரம் முதலிய
நிகண்டுகளை மட்டும் இங்கு ஒப்பாய்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது.





மேலே காட்டப்பட்ட அட்டவணையில் இருந்து, சில சொற்கள் சிவன்,
விஷ்ணு, அருகன், புத்தன் ஆகியோருக்கு பொதுவாக வழங்கப்பட்டிருப்பது
தெரியவரும். எனினும், பல குறள் சொற்றொடர்கள் அருகனுக்கு
மட்டும் சிறப்பாகக் குறிக்கப்பட்டிருப்பதும் காண்க.

எந்த ஒரு நூலாசிரியரும் தான் சார்ந்த சமயக் கடவுளர்களை
வணங்குவார்களேயன்றி, ஒரு பாட்டில் தன் சமயக் கடவுளையும்,
மற்ற பாடல்களில் பிற சமயக் கடவுளர்களை வணங்குவதுத்
தொன்று மரபில்லை. இம்மரபின் அடிப்படையில் மேலேக்
காட்டப்பட்ட அட்டவணையை நோக்க, குறளாசிரியர் உள்ளத்தை
எளிதில் புரிந்துக் கொள்ளலாம். என்னை? :-)

இலக்கியச் சான்றுகள்

1.ஆதிபகவன்

“மன்னியபே ருலகனைத்தும்
நின்னுள்ளேநீ யொடுக்கினை
ந்ன்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை-எனவாங்கு
ஆதிபகவனை அருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே” – திருக்கலம்பகம்

ஆதிபகவன் அசோக வசலன்
சேதிபமுதல்வன் சினவரந்தியம் பகன்” – திருப்பாமாலை

“அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதிபகவன் அருளே சரணம்” – தோத்திரத் திரட்டு

2. வாலறிவன்

கடையிகந்த காட்சியொடு கடையிகந்த வாலறிவன் – திருக்கலம்பகம்

இலங்கொளி முக்குடை எந்திரத் தியங்க
அறிவன் சரிதம் முறையிற் காட்டி – பெருங்கதை

அறிவினாலறியாத அறிவ நீ – மேருமந்தர புராணம்

உலகமூன்று பொருங்குட மேத்துமாண்
திலகமாய திற லறிவன்னடி – வளையாபதி

பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நி றிரட்டச்
சிங்க வாகனத் திருந்து தெளிந்தொரளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை கவிப்பத் தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம தறைந்தா யறிவர்தம் மறிவர்க்கு மறிவா - (நீலகேசி - 157)


3. மலர்மிசை ஏகினான்

“பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவன் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறாஅது”
– சிலப்பதிகாரம்-நாடுகாண் காதை -(200 - 205)

“விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரையணிந் தியாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
உண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காதலொழி யோமே” – சூளாமணி - 187


“முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்றாய்
யருகணங்கு யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே” – சூளாமணி - 188


“மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே” – சூளாமணி - 189



“தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவின்
துதித்துஈண்டு அறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து” – அறநெறிச் சாரம் - 1

“வாடாத் தாமரை மலர்மிசை யொதுங்கிய சேடுபடு சிறப்பிற் செல்வ!
நின் திருத்தடி
வீடுபெறு புண்ணியம் உடையோர்க் அல்லது
கூடா தேத்துதல்! கொடுமைசெய் பல்லுயிர்
நீடுபல திரிதலும் அனந்தங் காலமென” – திருப்பாமாலை - (1-5)

“மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
இனிதின் ஒதுங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குவதும் மகிழ்ந்தே” - திருக்கலம்பகம்

“ மயிலாபுரி நின்றவ ரரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவ ரலர்பூவி னடந்தவ
ரயிலார்விழி மென்கொடி மிடைதீபை நயந்தவ
ரமராபதி யிந்திர னணியாட லுகந்தவர்..” - திருக்கலம்பகம் - 74


“தாதார் மலர்மேல் நடந்தானை
தடம்சூழ் இஞ்சி நகரானை
தேதா எனவண்டு இடைபாடும்
செழுந்தண் பிண்டி நிழலானை
காதார் குழைகள் வெரிவீசக்
கனகப் பொற்றோள் கலந்திலங்கப்
போதார் மலர்கொண்டு அர்ச்சிக்கப்
புலராய் வாழி, பொழுதே நீ!” - தோத்திரத் திரட்டு - 6

“திருவில் மின்னார் கொலைபொய்யும்
சேரார் ஆதி அந்தமில்லார்
மருவு மரவும் தாதார
மன்னும் மலர்மேல் நடந்தானைப் பொருவில் காற்றில் நின்றிலங்கப்
பொங்கு பூவம் அங்கமுடன்
அருளும் கோல மணியார்தாள்
அணிய விடியாய், பொழுதே நீ!” – தோத்திரத் திரட்டு - 11

‘ஆக்கிய தொல்வினையும் ஆகும் வினைப்பயனும்
போக்கினேன் நம்பாற் புகுதாமல் நோக்கருஞ்சீர்
விண்ணவர்தம் கோமான் வெறிமலர் மேல்நடந்த
பண்ணவனைப் பாடிப் பணிந்து” – திருஇரட்டைமணி மாலை - 1

4. தனக்குவமை இல்லாதான்

(இச்சொற்றொடர் தமிழ்ச் சமண இலக்கியங்களில் குறித்திருக்கிறது. தற்போது என்
நினைவில் இல்லை. பின்னர் நூலறிந்து எழுதுகிறேன். வடமொழித் தரவுகளும்
கொடுக்க முடியும்.


5. அறவாழி அந்தணன்

“தூண்டுதிண் டேருருள் போலச் சுழன்றுதொல் யோனிகட்கே
மீண்கொண் டேகுமவ் வெவ்வினைக் கஞ்சிநின் மெய்ச்சரணம்
பூண்டு கொண்டேனினிப் போகவொட் டேன்பொரு ளாகவென்னை
யாண்டுகொண் டாயற வாழிகொண் டேவென்ற வந்தணனே
- திருநூற்றந்தாதி - 27

“களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்பர்
அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல்
விளியாக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே”
- சீவக சிந்தாமணி - 1611

“மறங்கொள் நேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோறியில்
பிறங்க வென்ற வென்றியோர் அனேகபேர்; உலகெல்லாம்
இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர்
அறங்கள் நேமி* கொண்டு வென்ற சோதி எங்கள் ஆதியே”
- திருக்கலம்பகம் - 25

6. வேண்டுதல் வேண்டாமை இலான்

வேண்டுதல் வேண்டாமை யில்லாத வீரனடி
பூண்டு கிடந்தால் புறத்திருந்த வெங்கூற்றம் போகும் போலும்
– திருக்கலம்பகம் – 58

ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான் – சிலப்பதிகாரம் (10:168-169)

பன்மாண் குணங்கட்கு இடனாய்ப்பகை நண்பொடு இல்லான்
தொன்மாண்பு அமைந்த புனைநல்லறம் துன்னி நின்ற
– சீவக சிந்தாமணி – 3

உவத்தல் காய்தல் உன் திருவுளத்து ஒன்றும் நீயிலையேல்
– மேருமந்தரப் புராணம் – 128

7. இருவினையும் சேரா இறைவன்

“அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய
நல்கிப் பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்
இருள்புரி வினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்”
– யசோதர காவியம் – 300

”ஆதியா யுலகியல்பை யளித்தாய் நீயே
அருந்தவனா யறம்பகர்ந்த அறிவ நீயே
காதியா யுருவினையைக் கடிந்தாய் நீயே
……………” – ஜீவசம்போதனை – 27

8.பொறிவாயில் ஐந்தவித்தான்

பொறிவாயில் ஐந்தவித்த புனிதன் நீயே – ஜீவசம்போதனை – 1:29)

ஐவரை வென்றோன் அடியினை – சிலப்பதிகாரம் – 10:198)

பொறி வரம்பாகிய புண்ணிய முதல்வன் – சீவக சிந்தாமணி – 2563

பொறியிலா அறிவன் நீ – மேருமந்தர புராணம் – 1000


9. இறைவன்

கண்ணி னாலொன்றுங் காணாய் காணவு முளபொரு ளொருங்கே
பெண்ணு மல்லவுஞ் சாராய் பிரிதலில் பேரின்ப முடையை
யுண்ணல் யாவது மிலையா யொளிதிக ழுருவமஃ துனதா
லெண்ணில் யார்நினை யுணர்வா ரிறைவர்தம் மிறைவர்க்கு மிறைவா
– நீலகேசி - (159)

"கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்ப
மிடையுறு நாமமின்மை விதித்த கோத்திரங்களின்மை
அடைவிலா ஆயுஇன்மை அந்தராயங்கள் இன்மை
உடையவன் யாவன் மற்று இவ்வுலகினுக்கு இறைவனாமே"
– சூடாமணி நிகண்டு (1)

குற்றமொன் றின்றிக் குறையின் றுணர்ந்தறம்
பற்ற வுரைத்தா னிறை – அருங்கலச் செப்பு (1)

நல்லான் வணங்கப் படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயரின்பமாக்கும்
செல்லான் தருமச் சுடரான் எனுந் தொன்மையினா
னெல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி – நீலகேசி – 1

10. எண்குணத்தான்

பண்ணவன் எண்குணன் – சிலப்பதிகாரம் – (10:188)

எண் குணனும்
கோட்பட்டு – சீவக சிந்தாமணி – 1469

“கேவல முற்பத்தி யாமள வேகிளர் பூசனைக் கென்
றேவலி யற்றுமவ் விந்திர னுகுமுன் னெண்குணத்தெங்
காவல னைக்கவிப் பார்வளைப் பார்முளைப் பார்களைப்போல்
மூவுல கத்துள்ள நால்வகைத் தேவரு முன்னுவரே”
- திருநூற்றந்தாதி (11)

பூமாமகளும் கலைமாமகளும் புகழ்ந்த திரு
நாமம் ஆயிரத்து இருநான்மையும் பாடி நடிக்கும்படி
கோமான் திருமலைக் குணம் எண் இறைவன் வரதம்
தேமா மலரிற் மணித்தே வணங்குவன்
– சிகாமணிநாதர் அந்தாதி – 12

எட்டுவல் வினை வென்ற பின்னையோர்
எட்டுநற் குண வேவினை.. – நேமிநாதர் பதிகம் – 3

ஆரணி தாலுகா அருகேயிருக்கும் குன்றம் திருமலை. இதற்கு
பல்குன்றக் கோட்டம், வைகைமலை, வைகாவூர்த் திருமலை
போன்ற பெயர்களுள் எண்குண இறைவன் குன்றம் என்பதுவும்
நோக்கத்தக்கது.

கல்வெட்டுப் பாடல்:

“வஞ்சியர் குலபதி எழினி வகுத்த
வியக்க நியக்கியரோ
டெஞ்சிய வழிவ்ய் திருத்தி யிவ்வேண்குண
விறை
திருமலை வைத்தான்
… தகடையர் காவலன்
விடுகாதழிய பெருமானோய்”

ஒவ்வொரு சொற்களுக்கும் குறைந்தது பத்து எடுத்துக்காட்டுகள்
கொடுக்க முடியும், விரிவஞ்சி கொடுக்கப்படவில்லை.

முடிபு:

இதுகாறும், பார்த்தத் தரவுகளின் மூலமும், நிகண்டுகளின்
தரவுகளின் அடிப்படையிலும் தேவர் பெருமான் உள்ளங்கவர்
இறைவன் அருகனேயாவார் என்பது அங்கை நெல்லிக்கனி!

இரா.பானுகுமார்,
சென்னை


அடிக்குறிப்பு:
(குறிப்பு: * எண்குணன் – பிங்கல நிகண்டு சில ஏடுகளில் தான்
சிவனுக்கு எண்குணத்தான் என்று குறிக்கப்பட்டிருக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது. சூடாமணி நிகண்டு பாடல்களை திருத்தி பதிக்க
முயன்ற வரலாறும் இங்கு நினைக்கத்தக்கது.)

1. இலக்கியச் சிந்தனைகள் – எஸ்.வையாபுரிப்பிள்ளை - (பக்கம்.134)
2. இலக்கியச் சிந்தனைகள் – எஸ்.வையாபுரிப்பிள்ளை - (பக்கம்.15)

Thursday, June 23, 2011

ஆதியாய் நின்றது மன்னவன் கோல்


ஆதியாய் நின்றது மன்னவன் கோல்


அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் – (திருக்குறள் – 543)

என்ற குறளில் வரும் ‘ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’
என்ற சொற்றொடர் மிக்க பொருள் பொதிந்தது. பரிமேலழகர்
தன் உரையில் ‘ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’ என்பதற்கு
வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா
ஆகலின், அதனை அவற்றிற்கு “ஆதி” என்றும் அப்பெற்றியே
தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் “நின்றது” என்றும்
கூறினார்” என்று மிக, மிக குழப்பமாகப் பொருள்
செய்திருக்கிறார். ஆனால், மணக்குடவர் உரையில்
‘ஆதியாய் நின்றது’ என்பதற்கு முதலாக நின்றது அரசன்
செய்யும் முறைமை’ என்று சிறந்த பொருள் செய்திருக்கிறார்.
அவற்றையும் ஈண்டு காண்போம்! இது நிற்க!!

“ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” என்பதில் நின்றது
என்பது இறந்தக் காலத்தைக் குறித்து நின்றது. அக்குறிப்பை,
மணக்குடவர் மிக சரியாய் ‘முதலாக நின்றது அரசன்
செய்யும் முறைமை’ என்று பொருள் செய்து
உணர்த்தியிருக்கிறார். ஆதியாய் நின்றது எனும் போது
முதலாக நின்றது அல்லது அமைந்தது என்று தான் பொருள்
கொள்ளவேண்டும். அதனால், மன்னவனே அந்தணர்களையும்,
அவர்களின் அறத்தையும் தோற்றுவித்தான் அல்லது
அவற்றுக்குக் காரணமாக அமைந்தான் என்றுதான் இந்த
குறளுக்குப் பொருள் கொள்ள வேண்டும். என்னை?

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

என்ற குறளில் ’அந்தணர் நூற்கும், அறத்திற்கும்’ என்ற
சொற்றொடரை ஆராய்வோம். பெரும்பாலோர், இச்சொற்றொடர்
வைதிகப் பிராமணர்களின் வேதத்தையும் அவற்றில் கூறப்பட்ட
அறத்தையும் குறிக்கிறது என்றுப் பொருள் கொள்கின்றனர்.
பிராமணர்களின் வேதங்கள் ரிக், யஜூர், சாம மற்றும்
அதர்வண என்பன.

பொதுவாக, வேதங்கள் அபௌருஷேயம்1 என்று அழைப்பார்கள்.
அபெளருஷேயம் என்றால் யாராலும் இயற்றப்பட்டதல்ல என்று
பொருள். யாராலும் இயற்றப்படவில்லை என்றால் மன்னவன்
எவ்வாறு அதற்கு முதலாகயிருந்திருக்க முடியும்? குறள் “ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்” என்று அழத்தம் திருத்தமாக கூறுகிறது.
அப்படியாயின் இங்கு கூறப்பட்ட அந்தணர் நூல் என்பதும் அறம்
என்பதும் வேறுப் பொருளைக் குறிக்கிறது என்பது திண்ணம்!
அவற்றையும் பார்ப்போம்!!

பரதச் சக்கரவர்த்தி

சமணச் சரித்திரத்தின் படி, இந்த யுகத்தின் முதல் சக்கரவர்த்தி
பரதர் ஆவார். இவர் ஆதி தீர்த்தங்கரரான ஆதிபகவன்
என்றழைக்கப்படும் ரிஷபதேவரின் முதல் மகன். இவருடைய
பெயராலேயே இப்பூமி (இந்தியா) பரத கண்டம் என்றும் பரத
க்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது. இவற்றைப் பற்றியக்
குறிப்பு பாகவதப் புராணத்திலும்2 கூறப்பட்டிருக்கிறது.

முதல் சக்கரவர்த்தி

சமணச் சரித்திரத்தின்படி, இந்த பரதரே3 இந்த யுகத்தில் முதல்
சக்கரவர்த்தியாவார்.

அந்தணர் என்போர் அறவோர்

சமணச் சரித்திரத்தின்படி, ரிஷபதேவர் தன் காலத்தில் மக்களை
அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டு, மூன்று வர்ணமாக
க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று வகைப்படுத்தியிருந்தார்.
ரிஷபதேவர்க் காலத்திற்கு பின், பரதர் ஆட்சிக்கு வந்தார். இவரே
பிராமணர்க்4 குலத்தைத் உருவாக்கி நான்கு வர்ணங்களாக ஆக்கினார்.
இவர் பிராமணர்களை எவ்வாறு, எந்த வகையினால் உருவாக்கினார்
என்பதையும் பார்ப்போம்.

அந்தணர்கள் தோற்றம்5

பரதர், தன் தந்தையான இரிஷபதேவரின் அறவுரைகளை மக்கள்
எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்று பார்க்க நினைத்தார். அதற்கு,
தான் தன்னுடைய நாட்டு மக்களை பார்ப்பதற்கு
ஆவலாகயிருப்பதாகவும் அதனால், மக்கள் அனைவரும் தன்
அரண்மனைக்கு வரவேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்தார்.
தன் நான்கு அரண்மணை வாயில்களிலும் வழி நெடுக முளைத்த
தானியங்களை இறைத்து வைக்கவும் உத்தரவிட்டிருந்தார். மக்கள்
தன் அரசனைப் பார்க்கவும், அந்த பெரிய அரண்மணையைப்
பார்க்கவும் நான்கு வாயில்களிலும் வரத் தொடங்கினார்கள்.
அவர்களுக்கு சிறந்த ஆடை அணிகலன்களைக் கொடுக்கும்படி
ஆணைப் பிறப்பித்திருந்தார். இவ்வாறு வெகு நாள்கள், மக்கள்
வந்துச் சென்றுக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம்,
பார்த்துக் கொண்டிருந்த பரத சக்கரவர்த்தி, வாயிற் காவலர்களை
அழைத்து, மக்கள் யாவரும் வந்தார்களா என்று வினவினான்.
அதற்கு அக்காவலர்கள், சிலர் மட்டும் அரண்மணைக்கு
வெளியேயே நின்று விட்டு போய்விட்டார்கள் என்பதையறிந்து,
அவர்களை தன்னை வேறொரு மாளிகையில் சந்திக்கும்படி
சொல்லியனுப்பினான். அவ்வாறே, அவர்களும் அம்மாளிகைக்கு
வந்திருந்தார்கள். பரத சக்கரவர்த்தி, ஏன் தன்னை அரண்மணையில்
சந்திக்க வரவில்லை என்று அம்மக்களை வினவினார். அதற்கு,
அரசே நாங்கள் தங்களை சந்திக்க ஒவ்வொரு நாளும் வரும்
போதும் அரண்மணை வாயில்களில் முளைத்த தானியங்கள்
இறைந்து கிடப்பதைப் பார்த்தோம். முளைத்தத் தானியங்களுக்கு
உயிர் உண்டு என்பதால், அவற்றிற்கு ஊறு விளைவிக்கக்கூடாது
என்பதால் தங்களை சந்திக்காமலே திரும்பி விட்டோம் என்று
பதில் கூறியதைக் கேட்ட பரத சக்கரவர்த்தி பெரிதும் உவகைக்
கொண்டு, நீங்கள், ஆதிபகவன்/ஆதிநாதர் பகர்ந்த அறத்தை
பிறழாமல் கடைப்பிடித்து வருவதனால், இன்று முதல் பிராமணர்கள்
என்று அழைக்கப்படுவீர்கள் என்றும் ஆதிபகவனால் அருளப்பட்ட
அறத்தை எக்காலமும் கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்று
கேட்டுக் கொண்டார்.

இவர்களையே, தேவர் பெருமான் (குறளாசிரியர்)
“அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்” – குறள் (30)

என்று நமக்குக் காட்டியிருக்கிறார்.

முடிபு:

இக்குறளில் வரும் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் என்று
வருவது அறவோர்களைக் குறித்தும் மற்றும் அவர்களுடைய
செந்தண்மை பூண்டு ஒழுகும் அறத்தையும் குறிக்கிறது
என்பது அங்கை நெல்லிக்கனி. இதனால், பரத சக்கரவர்த்தியே
ஆதியாய் நின்ற மன்னன் என்பது வெள்ளிடை மலை.

என்னை?

இரா.பானுகுமார்,
சென்னை

அடிக்குறிப்புகள்:
1 - http://www.tamilhindu.com/2008/07/special-feature-vedam/

2 - http://www.krishnamurthys.com/profvk/VK2/SBAB7.html
[..The story of JaDa-Bharata
The history of Priyavrata, the first son of Manu Svayambhuva,
is taken up in the fifth skanda. Privrata’s son was Agnidhra
and his son was Nabhi. Nabhi was a great and devout ruler
and to him was born another avatar of Mahavishnu, by name
Rishabha. Rishabha, also called Rishabhadeva had 100 sons
of whom the eldest was Bharata whose story we are going to
see elaborately.
(Incidentally it is this Bharata after whom this country
was called BhArata-varsha; before that it was called aja-nAbha varsha)…]

3 - http://en.wikipedia.org/wiki/Chakravartin
The list of 12 Chakravartins as per Jainism is as follows:[10]
1. Bharata - Lord Rishabha's son.
2. Sagara - Anscestor of Bhagiratha as per Hindu puranas.
3. Maghavan
4. Sanatkumara
5. Shantinath - (also a Tirthankara)
6. Kunthunath - (also a Tirthankara)
7. Aranath - (also a Tirthankara)
8. Subhauma
9. Padmanabha
10. Harishena
11. Jayasena
12. Brahmadatt
In Jainism, a chakravartin was characterized by possession of
saptaratna, that is, the seven jewels, consisting of, charka,
queen, chariot, jewel, wealth, horse, and elephant.
Additionally, the list also included a prime minister and
a son (navaratna). A chakravartin is considered an ideal
human being endowed with thirty-two major signs of excellence
and many minor signs of excellence.

4 - http://en.wikipedia.org/wiki/Kshatriya (Jaina origin)

5 – ஸ்ரீ புராணம்

Wednesday, June 01, 2011

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
- திருக்குறள் – துறவு – 346

இக்குறளில் வரும் “வானோர்க்குயர்ந்த உலகம் புகும்” என்ற
தொடர் மிகவும் முக்கியமானது. இத்தொடரில், அண்டவியல்
பற்றியக் குறிப்பு வருகிறது. ”வானோர்க்கும் மேலே உள்ள
உலகத்தில் புகும்” என்று சொல்லும் போது, வானோர்கள்
உலகம் யாது? அவர்களின் உலகத்திற்கும் மேலே உள்ள
உலகம் யாது? என்பனப் போன்ற கேள்விகள் எழுவது
இயற்கைத்தான். அவற்றுக்கு விடைக் காண வேண்டியது
முக்கியம்.

அவற்றைப் பார்க்கும் முன் இக்குறளுக்கு உரையாசிரியர்கள்
என்ன சொல்கிறார்கள் என்றுப் பார்த்துவிட்டு மேல் செல்லலாம்.

முதலில் பரிமேலழகர்

உரை: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் – தான்
அல்லாத உடம்பை யான் என்றும் தன்னோடு இயைபு இல்லாத
பொருளை எனது என்றும் கருதி அவற்றின்கண் பற்றுச்
செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்; வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு அரிய
வீட்டுலகத்தை எய்தும்.

மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர் பால்
பெற்ற உறுதிமொழிகளானும் யோகப் பயிற்சியானும் அவை
’யான்’, ‘எனது’ அன்மைதெளிந்து, அவற்றின்கண் பற்றை
விடுதல் சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான்
இவ் இருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடு உளது
என்பது கூறப்பட்டது.

அப்படியே மணக்குடவரையும் படித்துவிடுவோம்,

உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை
அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.

பரிமேலழகர் உரைவேறுபாடு

வழக்கம் போலவே இக்குறளிலும் தன் கைவண்ணத்தைக்
காட்டியிருக்கிறார் நம்ம பரி. அவர் உரை விரிவாகக் கூறப்பட்டிருப்பதுப்
போல் தோன்றினாலும், உண்மை பொருளை மறைத்துக் கூறியிருக்கிறார்.

எவ்வாறெனின்,

“வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு
அரிய வீட்டுலகத்தை எய்தும்” என்கிறார். மேலோட்டமாகப்
பார்த்தால் பொருள் சரியாகயிருப்பதுபோலத் தான் தோன்றும்
ஆனால், கூர்ந்து நோக்கினால் அதில் அவர் கையாண்ட பொருள்
மாற்றம் தெரியவரும்.

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் – இதற்கு வானோர்கள்
(தேவர்கள்) வசிக்கும் ”உலகத்திற்கும்” உயர்ந்த உலகம் புகும்
என்று தான் பொருள். ”வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகம்
எய்தும்” என்று அவர் உரை செய்திருப்பது இங்குப் பொருந்தாது.
அவ்வாறு உரைச் செய்யும் போது அவற்றின் நேரான பொருள்
மறைந்துப் போய் விடுகிறது. இவற்றை ஆராய்வோம்.

மணக்குடவர் உரை நேரிதன் பொருள் உரைக்கிறது. ” தேவர்க்கு
மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்” தேவர்க்கு மேலாகிய –
தேவர்கள் உறையும் உலகத்திற்கும் மேலாகிய உள்ள உலகத்தின்
கண்ணே செல்லும். என்பதுதான் சிறப்பான உரை.

சமண அண்டவியல்

சமணக் கோட்பாட்டின்படி, உயரின் தன்மைகளில், மேல் எழுப்பிச்
செல்லும் இயல்பும் ஒன்று. இதை

“வினையற விட்ட போழ்தின் வெடித்த ஏராண்டம் போல
நினைவரும் குணங்கள் எட்டும் நிறைந்து மேல் நோக்கி.. ”

என்று மேருமந்தர புராணம் கூறும்.

உயிரானது தன் வினைக் கட்டுக்களிலிருந்து நீங்கி, தன் சொரூபத்தை
உணரும் போது, மூவுலனின் உச்சியாகிய சிலாத்தலம் என்னும்
இடத்தில் போய் நீடு வாழும்/ நிலையாக தங்கும். இதை

“முனிவரும் உலகம் மூன்றும் இறைஞ்ச மூவுலகின் உச்சி
கனைகழல் அரசே நிற்றல் கைவலம் ஆகும் கண்டாய்”

என்று மேருமந்தர புராணம் கூறும்.

இச்சிலாத்தலம் வீடு, சித்தசேத்திரம், திருப்பேருலகம். மீளாகதி,
சித்தலோகம், அபாதம், லோகாக்ரம், சித்தசிலா, மோட்சத்தளம்,
உலகுச்சி, நிலமிசை, சிவகதி உறைநிலை போன்ற பெயர்களாலும்
அழைக்கப்படுகிறது.

மூன்று உலகம்

சமண அண்டவியல்படி, இந்த அண்டமானது மூன்று உலகங்களைக்
கொண்டது.

மேல் உலகம் - ஊர்த்வ லோகம் (பல அடுக்குகள் கொண்ட இந்த
இடத்தில் பலதரப்பட்ட வானவர்கள்/தேவர்கல் வசிக்கிறார்கள்)

மத்திய உலகம் – மத்ய லோகம் (மனிதர்கள், மிருகங்கள்,
பறவைகள், ஊர்வன மற்றும் கிருமிகள் வசிக்கும் இடம்)

கீழ் உலகம் – அதோ லோகம் (ஏழு அடுக்குகள் கொண்டது.
நரகவாசிகள் – நரகப் பிறப்பெடுத்த உயிர்கள் வசிக்கும் இடம்)

இவற்றின் குறியீடுதான் தீர்த்தங்கரர்களின் படிமத்தின் தலைமேற்க்
காட்டும் முக்குடைகள். மூன்று உலகத்தையும் கடந்து வென்றவர்
என்ற நோக்கில் முக்குடைக் காட்டப்படுகிறது.

“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்”

என்று சிலப்பதிகாரத்தில் வருவதைக் காண்க.

மேல் உலகம் – ஊர்த்வ லோகம்

மொத்தம் பதினாறு அடுக்குகளைக் கொண்டது இந்த மேலுலகம்.
இவற்றில் பலவகைப் பட்ட தேவர்கள் வாழ்கிறார்கள். தேவர்களிலும்
பலப் பிரிவுகள் சொல்லப்படுகிறது. அதையும் தாண்டி உச்சியை
சிலாத்தலம் என்றும் சித்தசிலை என்று அழைக்கப்படுகிறது.
வீடுபேறடைந்த உயிர்கள் சென்றடைவது இங்கேதான். சமண
கோட்பாட்டின்படி, வீடுபேறடைந்த உயிர்கள் மறுபடியும்
பிறப்பெடுப்பதில்லை.

இவற்றைக் கீழே வரும் பாடல் விளக்கக் காணலாம்.

“நடுவண் எண்புகைக் கொழுப்பாய் நந்தி ஈச்சிறகொத்து ஈற்றிற்
குடை மலர்ந்திருந்ததே போன்று இரண்டரை தீவோடு ஒத்துக்
கடையிலா அறிவு காட்சி உடையவர் கழுமி நின்ற
இடமது உலகத்து உச்சி ஏத்தருந் திறத்ததாமே”

என்று மேருமந்தர புராணம் பகரும்.

உலகுச்சி அல்லது சித்தசிலா அல்லது நிலமிசை

உயிரைவிட்டு அனைத்துக் கருமங்களும் நீங்குதல் அல்லது
விடுதல் வீடுபேறு எனப்படும். இது மொக்கம், மோக்ஷம்,
முக்தி, கைவல்யம், சித்தத்துவம், சிவகதி, சிவசுகம்,
நிர்வாணம், பரிநிர்வாணம், சேமம், சித்தகதி, பஞ்சகதி,
திரிதராகதி, அட்டமபுடலி, மீட்சியில் வீட்டுலகம், மீட்சியில்
பேரின்பம், இறுதியிலா பேரின்பம், பேர்த்துப் பிறவா பெருமை,
மீண்டுவாரா நெறி என பலவாறாகக் கூறப்படுகிறது.

“கேவல மடந்தை என்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட்
பூவலர் முல்லைக் கண்ணிப் பொனொரு பாக மாகக்
காவலன் தானோர் கூறாக கண்இமை யாது புல்லி
மூவுல குச்சி இன்பக் கடலுனுள் மூழ்கி னானே”
- சீவக சிந்தாமணி (3117)

என்றும்,

”அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
உலக மலோக முடனே விழுங்கிப்
புலவன் முடிவென்னும் பூங்கொடியுந் தானும்
நிலவு சிவகதியு ணீங்காது நின்றான்”
- சூளாமணி (2125)

என்றும்,

”மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
- திருக்குறள் (3)

முடிபு

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் என்பது வானோர்கள்
இருக்கின்ற அல்லது வசிக்கின்ற இடத்திற்கும் உயர்ந்த
உலகமான சிலாத்தலத்தில் தங்கும் என்பதுதான் நேரடையான
பொருள். பரிமேலழகர் தன் உரையில் சிறிது மாற்றிப்
பொருள் தந்திருக்கிறார் என்பது வெள்ளிடை மலை.

இரா.பானுகுமார்,
சென்னை

பி.கு: மேல் தகவலுக்கு கீழேச் சுட்டியைப் பார்க்கவும்!

http://en.wikipedia.org/wiki/Jain_cosmology
http://en.wikipedia.org/wiki/Moksa_(Jainism)